வாங்க.. வாங்க... வாங்க....

Saturday, April 24, 2010

நச்சு எண்ணம்

சமீபத்தில் தினசரிகளில் நான் படித்த இந்த செய்திகள் என்னை அதிர வைத்ததோடு வருத்தப்படவும் செய்தது.அதை உங்களோடு பகிரத்தான் இந்த பதிவு.


 கேரளாவில் இருந்து செருப்புக் கழிவுகளை தமிழகத்தின் கோவை மாவட்ட எல்லையில் கொண்டு வந்து லோடுலோடாக கொட்டி சுகாதாரக் கேட்டை ஏற்படுத்துகிறார்கள் என்று ஒரு செய்தி.

சிங்காரச் சென்னை என்றும் கூவத்தை சுத்தப்படுத்துகிறோம் என்றும்  கோடி கோடியாய் ஒரு பக்கம் செலவழித்துக்கொண்டிருக்க கோவையில் இப்படி சந்தடி இல்லாமல் இரவில் கேரளா குப்பையை கொண்டு வந்து கொட்டிக்கொண்டிருக்கிறது.இதை இப்போதே தடுப்பதை விட்டுவிட்டு பின் இதற்கும் கோடிகளை செலவழிக்கப்போகிறோமா? இதையே வேறு மாநிலத்தில் போய் செய்ய துணிவிருக்குமா அல்லது நாம் இப்படி செய்தால் சும்மா விட்டு விடுவார்களா?
வந்தாரையெல்லாம் வாழவைத்துக்கொண்டிருக்கும் நமக்கு கிடைக்கும் பரிசுதான் இதுவா? யாரோ எப்படியோ போகட்டும் நாம் நன்றாய் இருந்தால் போதும் என்ற ஈன எண்ணம்தானே இது?



மலேசியா,சவூதி அரேபியா மற்றும் பார்சிலோனியா ஆகிய நாடுகளில் இருந்து பல டன் குப்பை மற்றும் நச்சுக் கழிவுகளை கப்பல் மூலம் ஏற்றி இந்தியாவில் வந்து கொட்டப்படுகிறது என்று மற்றொரு  செய்தி.

இதன்  முன்னணி பின்னணி எதுவாகவேனும் இருந்து விட்டு போகட்டும், முதலில் இவர்கள் இந்தியாவை ஏன் தேர்ந்தெடுக்கிறார்கள், இந்தியாவைப் பற்றி என்ன நினைத்துக்கொண்டிருக்கிறார்கள்? இந்தியா என்ன குப்பை கிடங்கா? இதெற்கெல்லாம் இடம் கொடுத்தது எது,யார்? சுற்றுச்சூழல்பாதுகாப்பு  துறை என்ன செய்கிறது? இனிமேலேனும் இதை தடுக்க போகிறார்களா இல்லையா? நச்சு பொருள்களை இறக்குமதி செய்வானேன் பின் நோய் பரவி இறப்பவர்க்கு லட்சலட்சமாய் நிவாரணம் கொடுப்பானேன்?

ஐயா அரசியல்வாதிகளே, கொஞ்சமாவது வாங்கும் சம்பளத்திற்கு அல்லது லஞ்சத்திற்கு ஏதாவது நாட்டு மக்களுக்கு நல்லது செய்து அடுத்த ஜென்மத்திற்காவது புண்ணியம் தேடிக்கொள்ளுங்கள்.உங்களுக்கு ஓட்டு போட இந்த மக்கள் வேண்டும் அதற்காகவாவது இவர்களை காப்பற்றக்கூடாதா?


இளமுருகன்
நைஜீரியா.  24.04.20010  4.30 p.m.

Thursday, April 8, 2010

விடுமுறையின் வடு

ஆறு மாதத்திற்கு பின் மீண்டும் சொந்த ஊரில் கால் பட்டதும் அந்த சுகமான உணர்வு பாதம் தொடங்கி உச்சி தொட்டது.ஒவ்வொரு முறை கிளம்பும் போதும் ''இதுதான் கடைசியோ'' என்ற அபத்தமான பதைபதைப்பு வந்து அடங்கும்.இதனாலேயே பஸ் ஏறி விடை பெறும்போது கண் மறையும் வரை ஊரை பார்த்து உள்வாங்கி கொள்வது இயல்பு.

மெல்ல நான்கு புறமும் திரும்பி பார்த்தேன், மரங்கள் குறைந்து மாளிகைகள் வளர்ந்திருந்தன.வாகனப் பெருக்கம் தெரிந்தது.வலப்பக்கத்தில் நான் ஆறாவதிலிருந்து பன்னிரெண்டு வரை படித்த பள்ளிக்கூடம் இருந்தது.அந்த ஏழு வருடங்கள் தான் எப்படி எப்படி கழிந்தன.அங்கு கற்றதும் பழகியதும் தான் எத்தனை எத்தனை .ஒரு நாள் போய் அந்தந்த வகுப்பில் நான் அமர்ந்திருந்த இடங்களில் ஓரிரு நிமிடமாவது மீண்டும் அமர்ந்து பார்த்து விட வேண்டும். ம்ம்ம்...காலம் என்பது விநாடிகளாலும் நிமிடங்களாலும் ஆனது அல்ல ...அது நினைவுகளால் ஆனது!

பஸ்  நிறுத்தத்தில் இருந்து வீடு ஒன்றரைக் கிலோ மீட்டர்.மெல்ல நடந்தேன்.வழியில் சில பள்ளி நண்பர்களை பார்த்தேன்.''சரி இப்போதான் வரே...ரெஸ்ட் எடு ,பிறகு பார்க்கலாம் '' என்று அனுப்பி வைத்தார்கள்.என் பதினைந்து நாள் விடுப்பில் அந்த ''பிறகு'' வாய்க்கவே இல்லை.வீடு நெருங்குகையில் ,ஒரு புது மணப்பெண் முதன் முதலாய் கணவன் வீட்டை பார்க்கும் குறுகுறுப்பு ,ஆர்வம் வந்து ஒட்டிக்கொண்டது.வாசலிலேயே அப்பா,அம்மா,மனைவி மற்றும் மகன் அனைவரும் காத்திருந்தனர்.இவர்களையெல்லாம் விட்டு விட்டா இருக்கிறோம் என்ற எண்ணம் வந்து வதைத்தது.

ஊரிலும் உலகிலும் எத்தனையோ மாறி இருந்த போதும் அம்மாவின் அன்பு மட்டும் அப்படியே இருந்தது.வெயில்நாளாய் இருந்தாலும் உடம்புக்கு ஒத்துக்காதோ என வென்னீர் வைத்து கொடுப்பது,முதுகு தேய்த்து விடுவது,சாப்பிடும்போது போதும் என்ற பிறகும் ஒரு பிடி அள்ளி போடுவது,அரிதாகிப்போன கம்மஞ்சோறு ,கேழ்வரகு ஆக்கி அதற்கு முருங்கை கீரை கூட்டு வைப்பது,எள் உருண்டை செய்து தருவது ,வித விதமாய் ஊறுகாய் செய்து தருவது ...இவ்வளவு கஷ்டத்தில் அந்த தாய்க்கு என்னதான் சந்தோசமோ?

ஒரு  நாள் ஒன்றாம் வகுப்பிலிருந்து ஐந்து வரை படித்த ஆரம்பப் பள்ளிக்கு சென்று வந்தேன்.காலேஜில்,கம்பனியில் என்று நட்புகள் இருந்தாலும் வாழ்நாளில் மறக்கவே முடியாத நண்பர்கள் இந்த ஆரம்பப் பள்ளி நண்பர்கள்தான்.வெகு சிலரே ஊரில் இருந்தார்கள்.

எதிர்கால்  கனவுகளுக்காக
நிகழ்கால  சுகங்கள் இழக்கையில்
இறந்தகால  நினைவுகளை அசைபோடும் மனசு.

என் செல்ல மகன் என்னுடன் ஒட்ட இரண்டு மூன்று நாட்களாகியது. பலமுறை அப்பா என்றழைப்பதற்கு பதில் தாத்தா என்றே(என் அப்பாவிடம் வளர்வதால்) வாய் தவறி என்னைஅழைத்தபோது நான் எவ்வளவு தூரம் அவனை விட்டு விலகி இருக்கிறேன் என்பது 'சுரீர்' என சுட்டது.நான் அருகில் இல்லாததால் அவன் அப்பா என்றழைக்க வாய்ப்பில்லாமல் போன வருத்தமும் ஏக்கமும் தெரிந்தது.



ஊருக்கு வரும் நாள் நெருங்க நெருங்க மன பாரம் கூடிக்கொண்டே போயிற்று.தெரிந்தோ தெரியாமலோ ஒரு மாய வலையில் சிக்கி கொண்டாயிற்று.உடல் ஓரிடம் உயிர் ஓரிடம் என வாழ்கை ஆகிப்போனது. இரவு படுக்கையில் மகனிடம் சொன்னேன்:
'அகிலன் ,அப்பா நாளைக்கு ஊருக்கு போறேன்,நீ அழாம நல்ல பையனா இருக்கணும் என்ன?'
'சரிப்பா'
'அப்பா வரும்போது உனக்கு என்ன வாங்கியாரனும்?'
'அதெல்லாம் ஒன்னும் வேணாம்பா.. நீ போறதுக்கு முன்ன இன்னைக்கு சாயங்காலம் சைக்கிள்ல உட்கார வைச்சு ஒரு ரவுண்டு அடிச்சியே அது மாதிரி காலையில நான் ஸ்கூல் போறதுக்கு முன்னால ஒரு ரவுண்டு அடிகிறயா?'
'கண்டிப்பா, இப்ப தூங்கு'  தூங்கிப்  போனான் .
விடியற்காலை உச்சா விட எழுந்தவன் ''அப்பா மறக்காம ஒரு ரவுண்டு அடிக்கணும்,என்ன?' என்று விட்டு மீண்டும் தூங்கிப் போனான்.


காலையில் எழுந்து வழக்கமான அவசரத்தில் சூட் கேஸ்  நிரப்பி,பணம்,பாஸ்போர்ட் பத்திரப்படுத்தி சொந்தங்களுக்கு போன் செய்து விடை பெற்று  மகனையும் ஸ்கூல் பஸ் ஏற்றி விட்டு நானும்  புறப்பட்டு விமானம் பிடித்து நைஜீரியா வந்து சேந்து விட்டேன்.

போன்  செய்த போது மகன் ''தாத்தா..ச்சே...அப்பா என்னை சைக்கிள்ல ரவுண்டு அடிக்கிறன்னுட்டு அடிக்காமையே போயிட்டியே...'' என்றபோது மட்டுமல்ல இதோ இதை எழுதுகிற போது கூட கண்ணீர் முட்டுகிறது.

அன்புடன்...
இளமுருகன்

நைஜீரியா
08.04.2010  7.00 p.m.

Sunday, March 28, 2010

எர்த் அவர் (Earth Hour)

நேற்று எர்த் அவர்  (இரவு 8.30-9.30)அனுசரித்தீர்களா?நான் ஏதோ என்னால் முடிந்த மட்டும் என் அறையின் அனைத்து விளக்குகளையும் மின் விசிறி, எ.சி. போன்றவற்றை நிறுத்தி வைத்தேன். சில நண்பர்களுக்கும் சொன்னேன்.அந்த ஒரு மணி நேரத்தில் நான் தங்கி இருக்கும் காலணியை ஒரு ரவுண்டு வந்தேன்.வழக்கம் போல எங்குமே மின் விளக்குகள் எரிந்து கொண்டுதான் இருந்தன.இத்தனைக்கும் இங்குள்ள அனைவருமே எஞ்சினியர் லெவலில் இருப்பவர்கள்.யாருக்குமே இப்படி ''எர்த் அவர்'' என்று  ஒன்று அனுசரிப்பது பற்றிய அக்கறையே இருப்பதாய் தெரியவில்லை.தெரிந்திருந்தாலும் அது நமக்கல்ல யாருக்கோ என்பது போல கண்டுகொள்ளாமலும் இன்னும் 'ஆமாம் , இந்த ஒரு மணி நேரம் நிப்பாட்டிட்டா உலக வங்கி கடன அடச்சிரலாமா' என்று கிண்டலடித்துக் கொண்டும் இருந்தார்கள்.கண்டிப்பாக இந்த ஒரு மணி நேரம் நிப்பாட்டு வதால் மட்டும் ஒன்னும் ஆகிவிடாதுதான்.இது ஒரு குறியீடு,இதை வழக்கமாக கொண்டு தேவை இல்லாத போது தேவை இல்லாத மின் சாதனங்களை நிறுத்தி வைப்பதன் மூலம் வீட்டுக்கும் நாட்டுக்கும் நன்மை செய்தவராவோம்.

நேற்று லக்னோவில் எடுத்த கணக்கெடுப்பின் படி அந்த ஒரு மணி நேரத்தில் கிட்டத்தட்ட 500 மெகாவாட் மின்சாரம் மிச்சமாகி உள்ளது. சிறு துளிதான் பெரு வெள்ளம்.



தனி மனிதனிலிருந்துதான் எதுவுமே தொடங்க வேண்டும்.ஒரு தனி மனிதனுக்கு ஏற்படுவதுதான் நாளைக்கு சமுதாயத்திற்கும் ஏற்படும்.ஒரு தனி மனிதனுக்கு ஏற்படுவதை ஒவ்வொருவரும் தமக்கு ஏற்பட்டதாக எண்ணி குரல் கொடுக்க முன்வர வேண்டும்.ஏற்கனவே கூட்டு குடும்பம் சிதைந்து தனி குடும்பம் என தனி   தனி  தீவாக வாழும் நமக்கு சமுதாயத்தின் உதவி கண்டிப்பாக தேவை.ஆகவே நீங்கள் ஒருவருக்கு குரல் கொடுத்தால் தான் நாளை உங்களுக்கு ஒருவர் குரல் கொடுப்பார் என்பதை மறந்து விடாதீர்கள்.எனவே ''உங்கள் சுயநலத்திற்காகவாவது சமுதாய நலனை பேணுங்கள்''


எர்த் அவரில் என்ன செய்தாய் என்றேன் நண்பனிடம்
விளக்கணைத்தேன் என்று விளக்கமளித்தான்
அது தெரியும்
எர்த் அவரை எப்படி கழித்தாய் என்றேன்
விளக்கெண்ணெய் மாதிரி கேட்காதே
என்று விழி சொடிக்கினான்
மெல்ல புரிந்தது மேஜிக் -அவன்
'எர்த் அவர்'ஐ 'வொர்த் அவர்'  ஆக்கிக் கொண்டது.

அன்புடன்...
இளமுருகன்
நைஜீரியா
28.03.2010   7.40 p.m.

Thursday, March 11, 2010

நைஜீரியா பதிவர் சந்திப்பு 11.02.2010

'கற்றோரை கற்றோரே காமுறுவர்' என்பது போல எழுத்தின் மூலம் என்னை கண்டுகொண்டு ஆதரவு தந்த நண்பர்கள் அனைவர்க்கும் நன்றி.முன் பின் தெரியாமல் வெறும் எழுத்தின் மூலம் அறிமுகம் ஆகும் நட்பு சுவாரஸ்யமானது.எழுத்தின் வழி ஒருவர் மீது அன்போ வெறுப்போ கொள்வது எழுதும் எழுத்துக்கு கிடைக்கும் மரியாதை.அப்படி ஒரு மரியாதை எனக்கு கிடைத்தது.அண்ணன் நைஜீரியா ராகவன் என்னை விருந்துக்கு அழைதார் என்பதை நான் இப்படிதான் எடுத்து கொள்வேன்.

சென்ற பிப்ரவரி 11  ம் தேதி நான் விடுமுறைக்கு இந்தியா செல்ல இருந்தேன்.அண்ணன்  ராகவன் மற்றும் அணிமா (யோக்பால்) 'ஆன் தி வே' யில் சந்திப்பிற்கு ஏற்பாடு செய்திருந்தார்கள்.நான் இணையத்திலும் அலைபேசியிலுமே அறிந்திருந்த இரு பெரும் தலைகளை(!) நேரில் சந்திக்க இருந்ததில் ஒர் உற்சாகம் + ஆர்வம் + எதிர்பார்ப்பு + பதற்றம்+பயம்  (பெரும் தலைகள் ஆயிற்றே) எல்லாம் இருந்தது.

நான்  கற்பனை செய்திருந்ததைவிட இளமையாகவே இருந்தார் ராகவன் அண்ணன்.மிக இயல்பாக, பழகிய சிறுது நேரத்திலேயே ஏதோ பத்தாண்டு பழக்கம் போல பேச ஆரம்பித்து விட்டார்.மதிய சாப்பாடு அவர் வீட்டில் தான்.அவருக்கு மேல் அவர் துணைவியார் அன்பாய் இருந்தார்.இருவரும் மாறி மாறி பரிமாறினார்கள்.நான் தனியன்.கூட பிறந்தவர்கள் கிடையாது .அந்த கணத்தில் ஒரு அண்ணன் இருந்திருந்தால்...இப்படிதான் இருக்குமோ என்று நினைத்து கொண்டேன்.

                 அடியேன்,அண்ணன் நைஜீரியா ராகவன் மற்றும்  யோக்பால்

அவர்  வீட்டு தோட்டம் பற்றி ப்ளாக்கிள் எழுதி இருந்ததை படித்திருந்ததால்
வெளியில் வந்து ஆர்வமாக பார்தேன்.வீடும் மிக்க நேர்த்தியாக வைத்திருந்தார்கள். .ராகவன் அண்ணன் என்னை வீட்டில் ஓய்வு எடுக்க சொல்லி விட்டு ஆபீஸ் போய் விட அவர் மகன் அரவிந்த் மற்றும் துணைவியாருடன் பேசிக்கொண்டிருந்தேன்.அர்விந்த்தின் பரந்துபட்ட அறிவில் மயங்கினேன்.மாலை நண்பர் யோக்பால் அவர் நண்பர் சோஜனுடன் வந்து சேர்ந்ததுமே உற்சாகம் தொற்றிக்கொண்டது.
                                                                                    நண்பர் சோஜன்

எங்கோ ஆரம்பித்த பேச்சு சினிமா ,அரசியல் என சென்றது.வேறு என்னதான் பேச இருக்கிறது?ஆனாலும் நண்பர் சோஜன் பேச்சில் ஆழம் இருந்தது.குறிப்பாக தெலுங்கானா பற்றிய அவருடைய பேச்சு சிந்திக்க வைத்தது.அண்ணன் நைஜீரியா ராகவன் ஆகட்டும் யோக்பால் ஆகட்டும் அடடா...நிறைய படிக்கிறார்கள் ! உலக நடப்பை உற்று கவனிக்கிறார்கள்.நான் அவர்களின் பேச்சை கவனித்து கொண்டு மயங்கி இருந்தேன் (ஐயய்யோ...நான் ஒன்னும் குடிக்கலீங்க!!!)

இரவு  உணவு சாப்பிட்டு விட்டு ராகவன் சார் வீட்டிலிருந்து பிரிய மனமின்றி கிளம்பி நண்பர் யோக்பால் மற்றும் சோஜனுடன் கெஸ்ட் ஹவுஸ்  சேர்ந்தேன்.
இரவு  நெடு நேரம் இந்த புது உறவுகளை பற்றி சிந்தித்துக்கொண்டிருந்தேன்.அனைவரையும் தம் உறவுகள் போல் பேசும் ராகவன் அண்ணன் குடும்பம் ,தூக்கம் கெட்டு காலையில் எனக்காக ஏர்போர்ட் வரை வந்து வழி அனுப்பிய நண்பர் யோக்பால் ...இப்படி எத்தனை இனிமையான மனிதர்கள் ...இவர்களுக்கு நன்றியை தெரிவிப்பது எப்படி?வாழ்கை பயணத்தில் நிறைய பேரை சந்திக்கிறோம் ...சிலரே மனதில் நிற்கிறார்கள்.

அன்புடன்...
இளமுருகன்
நைஜீரியா 
11.03.2010 8.40 a.m. 

Wednesday, February 10, 2010

அவனா இவன்?!

சிறு வயதில் என் லட்சியம் எல்லாம் 'நாம் ஒரு டிரைவர்'ஆகிவிட வேண்டும் என்பதுதான்.எங்கள் ஊருக்கு முதல் நாள் பஸ் வந்த போது ஏதோ நானே சொந்தமாய் பஸ் வாங்கிவிட்ட ஒரு சந்தோசம்.எங்கும் அதே பேச்சு.வித விதமாய் ஹாரன் அடிப்பது,அனைவருமே டிரைவருக்கு  டாட்டா காட்டுவது இப்படி  டிரைவர்ஆகிவிட எனக்கு நிறைய காரணங்கள் இருந்தன.

பின் நான் ஒரு ஆசிரியன் ஆகிவிட விரும்பினேன்.என் அப்பாவிடம் டியூஷன் படிக்க நிறைய பேர் வருவார்கள்.அப்பா வீட்டில் இல்லாத போது நான்தான் சமாளிப்பேன்.சொல்லிக்கொடுப்பது,விடைத்தாள் திருத்துவது முக்கியமாக மார்க் போடுவது என்று ஒரு பத்து பேர் நம் கையில் இருக்கிறார்கள் என்பதில் ஒரு கிரக்கம்.வெளியில் பார்க்கும்போது 'வணக்கம்' வாங்குவது பெருமையாய் இருக்கும்.இதனாலேயே ஆசிரியர் ஆகிவிட விருப்பப்பட்டேன்.

டீன் ஏஜ் பருவத்தில் நிறைய டிடெக்டிவ் நாவல்கள் படிக்க நேர்ந்த போது தமிழ்வாணனின் சங்கர்லால் ,ராஜேஷ்குமாரின் விவேக்,சுபாவின் நரேந்திரன்,சுஜாதாவின் வசந்த்,பி.கே.பி.யின் பரத் போல ஒரு சி.ஐ.டி. ஆகி விட விரும்பினேன்.அவர்கள் சாகசம்,நுண்ணறிவு இவை எல்லாம் பிரமிப்பை
ஏற்படுத்தின.அப்போதெல்லாம் வீட்டில் சாதாரண விசயங்களை கூட சந்தேக கண்ணுடனேயே பார்த்து 'ட்ரைனிங்'  எடுத்தேன்.

அதன் பின் கல்லூரியில் வேதியியல் பட்டம் முடித்து கெமிக்கல் கம்பனியில் வேலைக்கு சேர்ந்து CHEMICAL LAB,ANALYSIS,REACTION என்று ஒரு போதை இருந்த போது விஞ்ஞானி ஆக விரும்பினேன். வேதியியல் பலருக்கு கடினமான பாடம் என்பதால் அதில் சாதித்து கலாம் போல 'விஞ்ஞானி' ஆகி விடலாம் என்பது எண்ணமாய் இருந்தது.

பின் ஒரு தமிழ் பற்றுள்ள சுதந்திர போராட்ட வீரரின் (திரு.தி.சு.கலியானராமன்) தொடர்பு கிடைத்த போது வேலையை எல்லாம் விட்டு விட்டு முழு நேர இலக்கிய வாதி ஆகிவிட விரும்பினேன்.அவரின் பாண்டித்யம் என்னை கிரங்க அடித்தது.

இப்படி இன்னும் ஏதோதோ விருப்பங்கள் காலத்திற்கும் மாறிக்கொண்டே இருந்தது.காலம்தான் எல்லாவற்றையும் முடிவு செய்யும் என்பது பின்னர் புரிந்தது.இன்னும் கூட வகுப்பறைகளில் ''பிற்காலத்தில் என்னவாக ஆசைபடுகிறாய்''என்று ஆசிரியர் கேட்கும் போது அன்றைய தேதியில் எது நம்மை ஆட்கொள்கிறதோ அதையே தேர்ந்தெடுத்து 'அதாக ஆசை' என்று பதிலளிகிறார்கள்.

இன்று நம்மில் எத்தனை பேர் நாம் விரும்பியதாய் இருக்கிறோம்?படிக்க விரும்பியது ஒன்றாக இருக்க கிடைத்ததை படித்து விட்டு வாழ்கையை ஒரு ஏக்கத்தோடே வாழ்ந்து கொண்டிருக்க வேண்டி உள்ளது.''நான் நினைத்ததை படித்தேன்,விரும்பியவளை மணந்தேன்,பிடித்த வேலை கிடைத்தது,பிடித்த ஊரில் செட்டில் ஆகி விட்டேன்'' இப்படி யாராவது சொல்ல கேட்க ஆசையாய் இருக்கிறது.

இளமுருகன்
நைஜீரியா
10.02.2010  7.30 a.m.

Saturday, February 6, 2010

எல்லாமே வியாபாரம்தான்!

வாரம் ஒருமுறை வீட்டிற்கே வந்த வளையல்காரர்,புளி வியாபாரம் செய்தவர் ,மிளகாய் விற்றவர்,மாட்டு வண்டியில் வைத்துஉப்பு விற்றவர்,சைக்கிள் வைத்து பொரிகடலை விற்றவர் இவர்களும் 'பிசினஸ் மேன்'கள்தான்.என்ன ஒன்று இவர்கள் பிழைக்க தெரியாத நேர்மையான பிசினஸ்மேன்கள்.கள்ளம் கபடமற்ற வியாபாரிகள்.வரும் லாபத்தில் திருப்தி கொண்டவர்கள்.

அப்பொழுதெல்லாம் எங்கள் ஊருக்கு ஒரு வளையல் வியாபாரி வருவார்.வாரம் ஒருமுறை என்று கணக்கு.ஒரு மர பெட்டியில் வண்ண வண்ண வளையல்கள் பிளாஸ்டிக் வளையல்,மண் வளையல்,கவரிங் வளையல் இன்னும் பலப்பல வகை வளையல்கள்.அவரை யாரும் ஒரு வியாபாரியாய்மட்டும் பார்ப்பதில்லை.விற்பவர் வாங்குபவர் உறவையும் தாண்டி ஒரு நட்பு இருந்தது.'இது  மண் வளையல்மா..குழந்தைக்கு வேண்டாம்' என்று வியாபாரம் தாண்டி பேசுவார்.

வீணாய்போன எதையும் தலையில் கட்ட மாட்டார்கள்.நாளைக்கு முகத்தில் விழிக்கணுமே என்று உண்மைக்கு பயப்படுவார்கள்.மிளகாய்காரர் 'கொஞ்சம் பொறுங்க அடுத்த மாசம் புது சரக்கு வருது அப்ப வாங்கலாம் 'என்பார்.இன்று அப்படி யாரையாவது பார்க்க முடிகிறதா?எப்போது இவர்கள் மாறிப்போனார்கள்?

இன்று.. இன்றைய வியாபாரம் முடிந்தால் சரி,எவனோ எப்படியோ போகிறான் என்ற எண்ணமே உள்ளது.எதிலுமே வியாபார நோக்கமே பிரதான படுகிறது.வாங்கி வீட்டிற்கு வருவதற்குள் உதவாக்கரையாய் போகும் பொருட்கள்.சீனா பொருள் தரமில்லை என்று தெரிந்துமே வாங்கி புலம்பாமலா இருக்கிறோம்?போன வாரம் கூட ஆந்திராவில் சீனா போன் பேசிக்கொண்டிருக்கும் போதே வெடித்து ஒரு பெண் இறந்தது போனது தெரியாமலா இருக்கிறோம்?

வியாபாரி நம்மை தேடி வரும்போது விற்பதற்கு அவனுக்கு ஒரு ஞாயமான பயம் இருந்தது.சரியில்லை என்றால் அடுத்தமுறை போக முடியாது என்று பயந்தான்.ஆனால் இன்று நாம் ஷாப்பிங் மால்,டிபார்ட்மென்ட்டல்ஸ்டோர் என்று அவர்களை தேடி போகும்போது அந்த உண்மையான வியாபாரிக்கு இருந்த 'மன நேர்மை'காணாமல் போய் விடுகிறது.நாமே ஒரு கட்டத்தில் விலை அதிகமுள்ள பொருளே நல்ல பொருள் என்ற எண்ணமும் கொண்டு விடுகிறோமே?

இங்குதான் நல்ல வியாபாரி மன உளைச்சலுக்கு ஆளாகிறான்.ஒன்று வியாபார தொழிலை விட்டு  விடுகிறான் அல்லது அவனும் கலப்படம் செய்ய தொடங்குகிறான்.இப்படி அவனை தூண்டுவது நாமல்லவா?இன்று குழந்தைக்கு கொடுக்கும் பால் பவுடரில் கூட கலப்படம்.லாபம்தான் நோக்கம்.லாபத்தில் திருப்தி இல்லாதவனாக இருக்கிறான் இன்றைய வியாபாரி.

இவர்கள் மாறினார்களா அல்லது நாம் தான் இவர்களை மாற்றினோமா?

''ஒன்று வாங்கினால் ஒன்று இலவசம்''என்பதையும் ''தள்ளுபடி''என்பதையும் என்று நாம் நம்ப ஆரம்பித்தோமோ அன்று உண்மை வியாபாரி திகைத்து போகிறான்.இது எப்படி சாத்தியம்?ஒன்று வாங்கினால் மற்றொன்றை எப்படி இலவ மாக கொடுக்க முடியும் என்றும் முதல் போட்டுவாங்கி அதைஎப்படி தள்ளுபடி செய்து விற்க முடியும் என்றும் உண்மை வியாபாரி தலையை பிய்த்துகொள்கிறான்.இதை ஏன் யாருமே உணர மறுக்கிறார்கள் என்று வேதனைப்படுகிறான்.

உரித்த வெங்காயம் ,உரித்த பூண்டு,அரைத்த இட்லி மாவு என ஹை-டெக்காக இருக்கும்  நமக்கு  இதையெல்லாம் யோசிக்க நேரம் எங்கே இருக்கிறது?
''பத்துங்றத இருபதுன்னாலும் பரவால்ல எனக்கு உடனே வேணும் ''என்று வியாபாரிக்கே ஐடியா கொடுப்பவர்கள் அல்லவா நாம்?

இளமுருகன்
நைஜீரியா
06.02.2010  5.10 P.M.

Friday, January 29, 2010

இன்றைய தமிழகம்

ஒரு நாளைக்கு 18 மணி நேரம் உழைக்கும் என்னிடம்
ஒருவர் கேட்டார் -எதற்காக இத்தனை கஷ்டப்படுகிராய்?
நான் கேட்டேன்-கஷ்டபடாமல் எப்படி வாழ்கையை ஓட்ட முடியும்?
அவர் சிரித்தபடி சொன்னார்-என்னை பார்
ஒரு ரூபாய்க்கு அரிசி வாங்கி உண்டு விட்டு உறங்கி விடுவேன்
போரடித்தால் வண்ணதொலைகாட்சியில் திரைப்படம் பார்த்திடுவேன்,
உழைக்காமல் நோய் வந்தால் மருத்துவரிடம் ஓடிடுவேன்
உயர் சிகிச்சை பெற்றிடுவேன் ராஜ மரியாதையுடன் !
உழைக்காமல் எப்படி அப்பா இத்தனையும் முடியும்?
முதலாமவர் சிரித்தபடி கேட்டார் -நான் யார் தெரியுமா?
தமிழ் நாட்டு குடிமகன் 
என் நாட்டில் உணவுக்கு அரிசி ஒரு ரூபாய்
சமைப்பதற்கு கேசும் அடுப்பும் இலவசம்
பொழுதுபோக்கிற்கு வண்ண தொலைக்காட்சி மின்சாரத்துடன் இலவசம்
குடும்பத்துடன் உயிர்காக்கும் உயர் சிகிச்சையும் இலவசம்
எதற்காக உழைக்க வேண்டும் ?
நான் கேட்டேன் -உன் எதிர்கால சந்ததியின் நிலை என்ன?
பலமாக சிரித்தபடி உரைத்தார்
மனைவி பிள்ளை பெற்றால் ரூபாய் 5000 இலவசம் சிகிச்சையுடன்
குழந்தைக்கு சத்துணவு இலவசம் பாலர் பள்ளியில்
படிப்பு சீருடையுடன் மதிய உணவும் இலவசம் முட்டையுடன்
பாடப்புத்தகம் இலவசம் ,படிப்பும் இலவசம் ,பள்ளி செல்ல பஸ் பாஸும் இலவசம்
தேவை என்றால் சைக்கிளும் இலவசம்
பெண் பருவமடைந்தால் திருமண உதவித்தொகை ருபாய் 25000 இலவசம்    ஒரு பவுன் தாலியுடன் திருமண செலவும் இலவசம்
தேவை என்றால் மாப்பிள்ளையுடன் பேப்பரில் விளம்பரமும் இலவசம்
மகள் பிள்ளை பெற்றால் மீண்டும் அதே கதை தொடரும் அவள் வாழ்கையிலும்
நான் எதற்கு உழைக்க வேண்டும் !?
வியந்து போனேன் நான் !!!
(நண்பர் மெயில்லில் அனுப்பிய செய்தி இது,அவருக்கு நன்றி)

இளமுருகன்
நைஜீரியா
29.01.10  5.53 a. m.

Wednesday, January 27, 2010

திருவிளையாடல்-திரைவிமர்சனம்

நீங்கள் ஏன் உங்கள் வலைப்பதிவில் இதுவரை திரைவிமர்சனமே எழுதவில்லை என்ற வாசகர்களின்(?) அன்பான வேண்டுகோளை ஏற்று நாமும் திரைவிமர்சனம் எழுதலாமே என்று அமர்ந்த போது 'எந்த படத்திற்கு எழுதுவது ?'என்ற கேள்வி எழுந்தது.நான் இருப்பது நைஜீரியா என்பதாலும் திருட்டு VCD பார்ப்பதில்லை (கிடைக்காததால்)என்ற கொள்கையாலும் சமீபத்தில் எந்த புது  படமும் பார்க்காததால் சரி ''திருவிளையாடல்'' படத்திற்கு விமர்சனம் எழுதலாமே என  தீர்மானித்தேன்.
இனி விமர்சனம் :
படம் ஒரு பழத்தை மையமாகக் கொண்டு ஆரம்பிக்கிறது.'பழம்' பெறாத முருகனை சாந்தப்படுத்த சொல்லப்படும் கதையாக படம் நகர்த்தப்படுகிறது.அனைவருமே 'பழம்'பெரும் நடிகர்,நடிகைகள் என்பதால் நடிப்பில் பின்னி பெடல் எடுத்திருகிறார்கள்.சிவாஜி கணேசனை தவிர வேறு யாராவது இதில் நடித்திருந்தால்...சிவனுக்கு இவ்வளவு புகழ் வந்திருக்குமா என்பது சந்தேகமே.

தருமி-சிவன் 'கேள்வி-பதில்'காட்சியில் சிவாஜியையே நாகேஷ் தூக்கி சாப்பிட்டு விடுகிறார்.இந்த உண்மையான கோபத்தால் தான் பாண்டிய சபையில் நக்கீரரை  'அவன் இவன்'என சிவாஜி  பேசி நக்கீரரை நெற்றிக்கண்ணால் 'கொலை'செய்து விடுகிறார்.

ஹேமநாத பாகவதரை பாடியே துரத்தி அடிப்பது (no fight) புது யுக்தி.படத்தில் பாடல்கள் சிறப்பாக அமைந்திருந்த போதும் ஒரு பாடல் கூட re-mix ஸ்டைலில் இல்லாமல் அனைத்து பாடல் வரிகளும் ஈஸி யாக புரிந்துபோவது ஒரு குறையாகத்தான் தெரிகிறது.

தாட்சாயணி கணவனை (சிவன்) எதிர்த்து பேசிவிட்டு வீட்டை விட்டு வெளியேறும் போது பாரதிராஜா கண்ட 'புதுமை பெண்ணாய்' மிளிர்கிறார்.இந்த சீன்களில் பெண்கள் பக்கம் விசிலும் கைதட்டலும் தூள்பறக்கிறது.

பழதிற்காக 'புசுக்' கென கோபம் கொள்ளும் முருகன் ஔவை பலமுறை 'நீ ஒரு பழம் அதுவும் ஞானப்பழம் ' என பாடும்போது 'யாரைப்பார்த்து பழம் என்கிறாய்'என முருகனுக்கு கோபம் வராதது லாஜிக் காக இடிக்கிறது.

இப்படி படத்தின் கருவான பழத்திற்கு இயக்குனர் முக்கியத்துவம் கொடுத்ததாக தெரியவில்லை.காட்சிகளில் ஒரு சிறிய பழமே காட்டப்படுகிறது.அதை ஞானப்பழம் என்பதை நம்பமுடியவில்லை.

இன்றைய நம் சட்டசபையில் பேசுவது போல மாமன்னர் பாண்டியன் அவையிலும் 'அவன் இவன்'என்ற ஏகவசனங்கள் இடம் பெற்றுதான் இருகின்றன.இந்த வரலாறு தெரிந்துதான் நம் MLAகள் இன்று சட்டசபையில்நடந்து கொள்கிறார்கள்  என்ற கூடுதல் தகவலும் கிடைகிறது.

ஆக மொத்தம் அருமையான கைலாய செட் அமைப்புகள்,புரியும்படியான பாடல்கள்,மந்திர தந்திர காட்சிகள் என படம் குடும்பத்தோடு பார்க்கும் படியாகவே உள்ளது.

படம் முடிந்து வெளியே வரும்போது ''ஞானபழத்திற்கு கொட்டை உண்டாப்பா?''என்று என் மகன் கேட்ட கேள்விக்குத்தான் இன்றுவரை எனக்கு பதில் தெரியவில்லை.உங்களுக்கு...?
இளமுருகன்
நைஜீரியா
27.01.10   11.00 a.m.

Monday, January 25, 2010

பிச்சை ராமாயணம்

  1. பிறக்கும் போதே யாராவது 'பிச்சைக்காரன்'என்று பிறப்பதுண்டா?அப்படி பிறக்க யாருக்காவது விருப்பம்தான் இருக்குமா?அப்படி இருக்க பிச்சை எடுக்க நேர்வது எப்படி?பொறுப்பற்ற பெற்றோர்களா அல்லது பெற்றோர் யாரென்று தெரியாமல் பிறப்பதாலா?
  2. நாம் கோபத்தில் 'பிச்சை எடுத்தாவது பிழைத்துக் கொள்வேன்'என்று சொல்கிறோம் ,அது அவ்வளவு எளிதென்றா நினைக்கிறீர்கள்?
  3. பிச்சை எடுக்க நேர்ந்த அந்த முதல் நாள்,அந்த முதல் பிச்சையின் அவமானம் ஏற்படுத்திய வடு வாழ்நாளில் மறக்ககூடியதா?
  4. உங்கள் வாழ்நாளில் என்றாவது ஒருநாள் அல்லது ஒரு வேளை உணவாவது பிச்சை எடுத்து சாப்பிட்டு  இருக்கிறீர்களா?
  5. முதல் சம்பளம் வாங்கிய நாள்,திருமண நாள்,பிறந்த நாள் போல பிச்சை எடுத்த முதல் நாளும் மறக்க முடியாததாய் தானே இருக்கும்?
  6. பிறருக்கு உரியதை தெரியாமல் திருடுவதை காட்டிலும் பிச்சை கேட்பது உயர்ந்ததாக தெரிய வில்லையா?
  7. நீங்கள் சாப்பாட்டில் கை வைக்கும் போது சற்று முன் 'ஐயா சாப்பிட்டு ரெண்டு நாள் ஆச்சு ஏதாவது தருமம் பண்ணுங்க 'என்ற குரல் ஞாபகத்தில் வந்ததுண்டா?
  8. எந்த பாத்திர கடையிலாவது பிச்சைப்பாத்திரம் என்று விற்கிறார்களா?
  9. ஐஸ் கிரீம் ,பொம்மை,ஒயிட் யூனிபார்ம் என பிச்சை எடுக்கும் குழந்தைக்கும் கனவாய் போன ஆசைகள் இருக்கும் தானே?
     10.பிச்சைகாரர்களிடமிருந்தே திருடுபவர்களை பற்றி என்ன நினைகிறீர்கள்?

இளமுருகன்
நைஜீரியா
25.01.10  5.20 p.m.
        

கடன் கொடுத்தான் நெஞ்சம் போல...

நானும் அவரும் நல்ல நண்பர்களாகத்தான் இருந்தோம்.ஒருவர்மேல் ஒருவர் நல்ல மரியாதை வைத்திருந்தோம்.பார்க்கும்போதெல்லாம் நட்புடனும் பாசத்துடனும் நலம் விசாரித்துக்கொள்வோம்.இதெல்லாம் நான் அவருக்கு கடன் கொடுக்கும் முன் வரை.
ஒரு நாள் தயங்கி தயங்கி 'சார்,ஒரு அவசரம்.. ஆயிரம் ரூபா கடனா கிடைக்குமா...மூணு நாள்ல திருபிடறேன்' என்றார்.
''அதற்கென்ன சார்,இவ்வளவு நாள் பழகிஇருக்கோம் இது கூட பண்ணாமலா''
என்று ஆயிரம் கொடுத்தேன்.இதோடு சும்மா இருந்திருக்கலாம்.
''ஆமாம் அப்படி என்ன சார் அவசரம்.. தெரிஞ்சுக்கலாமா''
'' நாளைக்கு பையனுக்கு ஸ்கூல் பீஸ் கட்ட கடைசி நாள் ஆக்சுவல்லா ரெண்டாயிரம் கட்டணும் அதான்..மாச கடைசி உங்க கிட்ட இதுக்கு மேல கேட்க கூடாது மீதிக்கு நான் பார்த்துக்கிறேன்''
''என்ன சார் இது எப்படியும் இன்னும் மூணு நாள்ல திருப்பிட போறிங்க ஒரு வழியா என்கிட்டயே கேட்ககூடாதா? இன்னும் ஆயிரத்துக்கு எங்க போய் நிப்பிங்க இந்தாங்க''என்று இன்னும் ஆயிரம் கொடுத்தேன்.
அடுத்து ஒரு வாரத்துக்கு அவரை பார்க்க முடியாதபோது அதை நான் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை.பின் எனக்கு பணமுடை வந்த போது நண்பர் ஞாபகத்துக்கு வந்தாரே ஒழிய நண்பர் நேரில் வரவில்லை.அப்போதுதான் அவர் என்னை பார்ப்பதை தவிர்க்கிராறோ என்ற ஐயம் எழுந்தது.
கடன் கொடுத்த பத்தாவது நாள் நண்பரை சந்தித்தேன்.இந்தமுறை அவரை வழக்கம் போல எதிர்கொள்ள முடியவில்லை.அவரும் குற்ற உணர்வுடனே பேசினார்.'சாரி சார்,வெளியூர் போய் இருந்தேன் அதான்'
'பரவா இல்லை சார் எனக்கு இப்ப பணம் தேவைப் படுது அதான் திருப்பிட்டிங்கன்னா பரவா இல்லை'
'சார்...இன்னும் ஒரு ரெண்டு நாள் பொறுக்க முடியுமா' என்றுஇழுத்தார்.
'இல்ல சார் மூனு நாள் சொன்னிங்க இப்ப பத்து நாளைக்கு மேல ஆச்சு' என்று முகம் பார்க்காமல் பேசினேன்.
'சொன்னேன் ஆனா முடியல,கொஞ்சம் பொறுத்துக்குங்க'
மீண்டுன் அதன் பின் அவரை பத்து நாள் பார்க்க முடியாதபோது எரிச்சல் வந்தது.எரிச்சல் ஆத்திரமாகி கோபமானது.பின் சந்தித்த நாட்களில் காரணங்கள் தான் சொன்னாரே ஒழிய பணம் வந்தபாடில்லை.'இவனுக்கு'ஏன்டா கடன் கொடுத்தோம் என்றாகிவிட்டது.கடன் வாங்கிய துரையே கடன் கொடுத்த நாயே என்பது போல நடையாய் நடந்து அவன் வீட்டில் இல்லாதபோது அவன் மனைவியிடம் கோபப்பட வேண்டியதாயிற்று.
கடைசியாய் கசப்புடன் பணம் பல தவணைகளில் வசூலிக்கப்பட்டாலும் மன உளைச்சலும் நட்பு இழந்ததும் தான் மிச்சம்.நான் கடன் கொடுத்து இழந்த நட்புகள் இதுபோல் பல.நான் இல்லை என்று நழுவி இருந்தால் அவ(ன்)ர் நட்பாவது மிஞ்சி இருக்குமோ?
நண்பர்களே...கடன் கொடுப்பது ஒரு உதவி தானே?உதவி செய்வதால் ஏன் உபத்திரவம் வருகிறது?நண்பர்களை இழக்காமல் இருக்க வேண்டும் என்றால் கடன் கொடுக்க கூடாது என்ற கசப்பான உண்மை உண்மைதானா?அல்லது கடன் கொடுத்தால் அதை மறந்து விட வேண்டுமா? ''Neither a borrower nor a lender be;loan oft loses both itself and friend'' என்பது எல்லா நேரத்திலேயும் சரியா?
இளமுருகன்
நைஜீரியா
25.01.2010
12.30.A.M.

Saturday, January 23, 2010

இது புரியுதா பாருங்க!

நான் ஒன்றும் 'இலக்கிய பேரொளி'இல்லை என்றாலும் ஏதோ அதில் ஒரு ஒட்டு உறவு இருக்கிறது.முதலில் லா.ச.ராமாமிர்தம் படித்தபோது சில ஏன் பல இடங்கள் புரிவது போலவும் புரியாதது போலவும் இருந்த போது நமக்குதான் 'ஞானம்'போதவில்லை என்று தேற்றிக்கொண்டேன்.அதையாரிடமும் சொல்லிகொள்ளவில்லை.'புரியவில்லை'என்றால் நம் கொஞ்ச 'அறிவும்'சந்தேகத்திற்கு இடமாகிவிடுமே!பின்னாளில் பலர் இப்படி 'அவர் புரியாத'புதிராக எழுத கூடியவர்தான் என்று ஓபனாக சொன்னதும் 'எனக்கும்'என்று என்னையும் இணைத்துக்கொண்டேன்.இப்படி எப்போதுமே நமக்கு யாராவது எடுத்துகொடுக்க ஆள் தேவைப்படுகிறது.

பின் நாட்களில் ஜெயகாந்தன்,பாலகுமாரன்,அசோகமித்திரன்,பிரபஞ்சன் எல்லாம் படித்தபோது சில இடங்கள் நின்று படிக்க வேண்டி இருந்தது.மனம்,புத்தி என்றதும் உடனே புரியாதது 'குடிக்கிறது தப்புன்னு புத்திக்கு தெரியுது ஆனால் மனசு கேட்க மாட்டேங்குதே'என்றதும் உடனே புரிந்தது.பிறகு கோணங்கி படிக்க நேர்கையில் மீண்டும் என்மீது சந்தேகம் வந்து விட்டது.சாரு நிவேதிதாவின் 'ஜீரோ டிகிரி'படிக்கையில் அது ஒரு செக்ஸ் புக் என்றே முதலில் நினைத்தேன்.முன்னுரையே மிரட்டி எடுத்து விட்டது.கடைசிவரை என்ன சொல்ல வருகிறார் என என் அறிவுக்கு புரியவில்லை.

இப்படிதான் மாடர்ன் ஆர்ட்டும்,எனக்கு இன்றுவரை புரியாத ஒன்று.ஒரு வேளை நம் 'மசால்'அவ்வளவுதான் என நினைத்து கொண்டாலும் அதில் ''ஏதோ''இருக்கத்தான் செய்யும் என்று நம்புகிறேன்.ஒருமுறை இசைமேதை எஸ்.ராஜம் சொன்னது போல ''அவங்க யோசிச்சு படம் போடுறாங்களா இல்ல படத்தபோட்டுட்டு அதுக்கு விளக்கம் யோசிப்பாங்களான்னு'' ஒரு சந்தேகம் உண்டு.

அவார்ட் வாங்குற படம்கூட 'புரியாத' படம்தான்.ஒரு வேளை எல்லோர்க்கும் புரிந்து போய் இருந்தால் அவார்ட் கூட கிடைச்சி இருக்காதோ?.கூட்டத்துல கூட புரியாம பேசுனா ஏதோ டீப்பா பேசுறதாஒரு நினைப்பு வந்து விடுகிறது.நம்மள விட அறிவாளின்னு மனசு நினைத்துகொள்கிறது.

சில கவிதைகள் கூட இப்படி தான் புரிய மாட்டேன்கிறது.இத்தனைக்கும் அதுவும் என் தாய் மொழி தமிழில் தான் எழுதப்பட்டிருகிறது.ஒருவேளை கவிதை எழுதும் போது கற்பனை அளவுக்கு மீறி மொழி தாண்டி போய் விடுகிறதோ?

நண்பர்களே...இதில் குறை எங்கே இருக்கிறது?என் அனுபவ பற்றாக்குறையா அல்லது 'புரியாத' அந்த ஒன்றுக்கு ஏதாவது ஸ்பெஷல் அறிவை வளர்த்துகொள்ளதாதா?இந்த அனுபவம் உங்களில் யாருக்காவது ஏற்பட்டிருக்கிறதா,அப்படி இருந்து அதில் இருந்து மீண்டிருந்தால் அந்த உக்தியை பகிர்ந்து கொள்வீர்களா?

இப்படிக்கு
புரிந்தும் புரியாத புரிந்ததுபோல புரிந்துகொள்ளும்
இளமுருகன்.

குழந்தைகள்


பொய் சொல்லல் ஆகாது என்றதும் குழந்தை பொய் என்றால் என்ன என்றது
இப்போது நான் பொய் சொல்லிக்கொடுக்க வேண்டியதாய் போயிற்று



குழந்தைகள் தெய்வம் என்றால்
''நான்(னு)ம் கடவுளாய்'' இருந்திருக்கிறேன் தானே?





குழந்தைகளுக்கு சொல்லிக்கொடுப்பது இருக்கட்டும்
அதற்கு முன்
அவர்களிடமிருந்து கற்றுகொள்வோம் வாருங்கள்

Wednesday, January 20, 2010

இன்றைய வலைப்பதிவு உலகம் அசர அடித்து கொண்டு இருக்கிறது. RADAN போன்ற பெரிய நிறுவனங்கள் வலைபதிவர்களை 'வலை' போட முயற்சிபதிலிருந்தே இது தெள்ளென தெரிகிறது.எனவே வலை பதிவர்கள் எச்சரிகையுடனம் பொறுப்புடனும் எழுதவேண்டிய நேரம் இது.பத்திரிக்கை எப்படி சமூகத்துக்கு நாலாவது தூணோ அதுபோல வலைபதிவு ''ஐந்தாவது தூண்''

Sunday, January 17, 2010

அறிமுகம்

வணக்கம் அன்பு தமிழ் உள்ளங்களே...முதன்முதலாய் இன்று இந்த வலைப்பதிவை தொடங்குகிறேன்.அன்பு கரம் நீட்டி ஆதரவு தரவும்,உற்சாகபடுத்தவும் வேண்டுகிறேன்.
அன்புடன்...
இளமுருகன்.

இன்றைய தலைப்பு செய்திகள்